ஊடகங்கள் மீது அண்மைய வாரங்களில் அரசாங்கம் அடக்கு முறையை அதிகரித்திருப்பதாக விசனம் தெரிவித்துள்ள ஊடகவியலாளர்கள் நேற்று திங்கட்கிழமை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதேசமயம், தடுத்து வைக்கப்பட்டுள்ள எதிரணிப் பத்திரிகை ஆசிரியரை விடுதலை செய்யுமாறும் வலியுறுத்தினர் நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள் கோட்டை ரயில் நிலையம்முன்பாக ஒன்று கூடியதுடன், ஊடகங்கள் செய்திகளை வெளியிடுவதற்கு இடையூறு விளைவிக்க வேண்டாமென அரசாங்கத்தை வலியுறுத்தினர். அத்துடன், லங்கா பத்திரிகை ஆசிரியர் சந்தன சிறமல்வத்தவை விடுவிக்குமாறும் கோரிக்கை விடுத்தனர். "ஊடகங்கள் மீதான அடக்கு முறையைக் கண்டிக்கிறோம்%27, "சந்தன சிறிமல்வத்தவை விடுதலை செய்யுங்கள்%27, "ஆட்சியாளர்கள் மக்களின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்%27 என்ற கோஷங்களை எழுப்பியதுடன், சுலோக அட்டைகளையும் தாங்கியிருந்தனர்.
ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீண்டும் தெரிவு செய்யப்பட்ட பின் ஊடகவியலாளர் மீதான அடக்குமுறைகளை முடிவுக்குக் கொண்டு வருமாறு இலங்கை அரசாங்கத்தை சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் ஊடக அமைப்புகளும் வலியுறுத்தியுள்ள நிலையில், இலங்கையைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.அரசாங்கம் ஊடகங்களை நசுக்கிவிட முயற்சிப்பதாகவும் அரசாங்கத்தை விமர்சிக்கும் பத்திரிகையாளரை அடக்க முயல்வதாகவும் ஊடக உரிமைக்கான பணியாளர் சுனில் ஜயசேகர கூறினார்.
கடந்த இரு வாரங்களாக இலங்கையின் ஊடக சுதந்திரம் மோசமான நிலைமையை எதிர்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாகவும் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமெனவும் ஜயசேகர தெரிவித்தார்.